அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் இன்று திருச்சிற்றம்பலம் அரங்கில் "அன்னை விழா" மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், பேராசிரியர் முனைவர் அன்னபூரணி அனைவரையும் வரவேற்று பேசினார். பின், அன்னை சாரதா தேவியின் உபதேச மொழிகள் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவிகள் பலர் எடுத்துரைத்தனர்.
அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முனைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், ஜனவரி மாதத்தில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் குருபூஜை முடிந்தவுடன் நமது சாரதாலயத்தில் அன்னைக்கு எடுக்கப்படுகின்ற முக்கிய விழாவாக இது அமைந்திருக்கிறது என்றும், ஆன்மீகப் பணியை சமூகப் பணியாக ஆற்றி பொதுநோக்கத்தோடு தம் வாழ்நாள் முழுவதையும் ஆன்மீக முழுமை நிறைந்ததாக மாற்றியவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாமணி தேவியாரும் ஆவர் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஸ்ரீ சாரதா மடத்தின் ஆன்மீக பேச்சாளர் பிரவ்ரார்ஜிகாயதிந்திர பிராணா, "நவீன பெண்களுக்கு தூய அன்னை சாரதையின் உபதேசங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
நிரைவாக, வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் சாரதா நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன், முன்னாள் துணை வேந்தர் முனைவர் சரோஜா பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.